×

இந்திய எல்லையில் இலங்கை கடற்படை அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில், இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் காலை பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மாலையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, படகில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் பல முறை சுட்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

இதனால், அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்று மீன்பிடித்தனர். இலங்கை கடற்படை அச்சத்தால், ராமேஸ்வரம் மீனவர்கள் மிகக் குறைந்த மீன்பாடுடன் நேற்று கரை திரும்பினர். இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கும்போது, இலங்கை கடற்படை உள்ளே அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை விரட்டியடித்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

* கிரிக்கெட் தோல்வி காரணமா?
கடந்த 2011ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கை தோற்ற ஆத்திரத்தில் அன்றிரவு ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படையினர் வெட்டிக் கொன்று கடலில் வீசினர். கடந்த ஞாயிறன்று நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது. துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கிரிக்கெட் தோல்வியும் காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

The post இந்திய எல்லையில் இலங்கை கடற்படை அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு மீனவர்கள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Indian border ,Rameswaram ,Pak strait sea ,Indian Ocean ,Lanka ,
× RELATED ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்!